‘தாய் தா(த்)தா '
- திருவருணை சிவசு
கதை நாயகன் தாய் தாதா பெயர் காரணம் -ஒரு பெரிய வாட்ஸாப் கதை.!.
“ தாய் தாத்தா” என்று மெல்லச்சொல்லுங்கள் , வயசானாலும் காது படு ஷார்ப் அவருக்கு கேட்டுவிட போகிறது! . அப்புறம் உங்கள் கதி ‘அதோ ‘ கதிதான். தாய் தாத்தா என்று சொன்னாலே கோபம் மூக்குமேல வரும் அவருக்கு , மூக்கு ஏற்கனவே நீளம் துப்பறியும் சாம்பு போல கோபத்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் நீளமாக தெரியும் . “மனுஷாளுக்கு மூக்குதான் பிரதானம்
தெரியுமோ ?” என்று தனது மூக்கின் பெருமையை மற்றவர் மூக்கில் விரல் வைக்கும்படி பேசுபவர்.
அவர் தன்னை “தாய் மாமா” என்றோ “தாய் அங்கிள்’ என்றோதான் கூப்பிடச் சொல்லுவார். தாய் தாத்தா என்று யாரவது கூப்பிட்டால் ,அந்த இடம் ரண களம்தான் ,தாய் ‘தாதா’ ஆகிவிடுவார் .அதுவும் அப்படி கூப்பிடுபவர் ஒரு மாமியாக இருந்தால் ஒரு பெரிய ரகளையே நடக்கும். ரணகளத்தின் களம் பெரும்பாலும் ஒரு திருமண மண்டபமோ,ஒரு மினி ஹாலோ இல்லை மைக்ரோ ஹாலோவாகத்தான் இருக்கும். அவர் சுற்றத்தில் எல்லா விசேஷங்களுக்கும் தாய் மாமா இல்லாமல் நடக்காது,நடக்கவும் விட மாட்டார்! .
ஒரு சமயம் மாமி ஒருத்தர் ஒரு கல்யாணத்தில் , ‘தாத்தா இங்க சித்த சும்மா இருங்கோ ‘ என சொல்ல, “ஏண்டியம்மா எனக்கு என்ன அப்படி வயசாறது? .உங்க ஆத்துகாரரை விட கம்பி தெரியுமோ ,அங்கிள்னு ஜென்டிலா கூப்பிடேன் . உங்க குசும்பு போகாதே ..” என்றார். எதற்கு வம்பு ? எனவே சர்வ ஜாக்கிரதையாய் “ தாய் மாமா “ என்றே இனி சொல்லுவோம்.
அந்த வாதூல கோத்திர குரூப் எந்த விழா ஆனாலும் ‘தாய் மாமா’ வந்துவிடுவார். நிஜமான தாய்மாமா வராத பங்க்ஷன் கூட இருக்கலாம் ஆனால் ,இந்த கதை நாயகன் ‘தாய் மாமா ‘ வராமல் இருக்கமாட்டார்.
முன்பு தாய் மாமாவிற்கு சுப்புணி என்று சுருங்க பூர்வ நாம கரணம் . உண்மையில் சுப்பிரமணி என்று முழு நாமம். தாய் மாமா பெயர் வர காரணம் அவர் சின்ன வயசில் எஸ் .எஸ் .எல் சி படிக்கும்போது தாய்லாந்துக்கு ஊரை விட்டு ஓடிப்போய் எப்படியோ ஒரு வேலை பார்த்து, கடைசியாய் பட்டயா தீவில் ஒரு ஓட்டலில் மானேஜர் வேலை. ரிடையர் ஆகி 13 வருஷம் ஆகிறது. அதற்குள் தாய் மாமா வயசை கணிக்காதீர்கள் ! . இப்போதெல்லாம் வி. ஐ .பி டை ஷாம்பு உபயோக்கிறார் . இப்படித்தான் ஒரு முதிர் கன்னி கல்யாணத்தில்,பெண்ணிற்கு இலேசான நரை தெரிய “ஏண்டியம்மா ஒரு வி .ஐ .பி ஷாம்பு போட்டிருக்கலாமே “ என சொல்ல ஒரு பெரிய களேபரம் ஆகி விட்டது. மாப்பிள்ளை கோபித்துக்கொள்ள “சரி விடு இவன் இல்லன்னா என்ன நான் இருக்கேன் “ என்று சொன்னது ஹை-லைட!
கொஞ்சம் பெரியவர்கள் யாராவுது சுப்ரமணி என்று கூப்பிட்டால் ‘அது மூன்றாம் பிறை ஸ்ரீதேவி நாய் பேராச்சே ,என் அப்பா எதுக்கு அப்படி ஒரு பேர் வெச்சார்ன்னு தெரியலை ‘ என்று நழுவி விடுவார்.
ஸ்ரீதேவி பாத் டப்பில் இறந்தது குறித்து விசும்பி அழுத மாமாக்களுள் ஒருவர்.அன்று மட்டும்தான் தாய் மாமா எந்த பங்க்ஷனும் போகலை. ஸ்ரீதேவியின் 50 வயது தாண்டி நடித்த எந்த படமும் பார்க்கவில்லை தாய் மாமா . சிகப்பு ரோஜாக்கள் ஸ்ரீதேவியும் ,’ செந்தூரப்பூவே’ ஊஞ்சல் ஆட்ட ஸ்ரீதேவியம்தான் தன் நினைப்பில் எப்போதும் இருக்கவேணும் என்பதால் !
குறிப்பிட்ட அந்த சுற்றத்தார் வீட்டு எந்த விழா ஆனாலும் தாய்மாமா ஆஜர் ,கூப்பிடாவிட்டால் அவ்வளவுதான். அப்படியே கூப்பிடவில்லயென்றால் கூட “ஏதோ இந்த பக்கம் வந்தேன் ,மண்டபத்து வாசல்ல பேர் பார்த்து கன்டுபிடிச்சிட்டேன் நம்ம ரிலேஷன் பங்க்ஷன் எப்படி விட்டு கொடுக்க முடியும் ‘“ என்பார் . கொஞ்சம் சத்தமாக , வேண்டுமென்றே அப்படி சொல்வதால் அடுத்து அவருக்குத்தான் முதல் பத்திரிகை போகும்.
எந்த விழா ஆனாலும் தாய் மாமா வந்துவிட்டால் களை கட்டிவிடும். பத்திரிகையில் பெஸ்ட் காம்பிளிமெண்ட்ஸ் ‘தாய் அங்கிள் ‘ என்று பெயர் போடுவோறும் உண்டு. எந்த விழா ஆனாலும் அவர் கலாய்க்காத ஆள் யாரும் இருக்க முடியாது. கல்யாணத்தில் காசியாத்திரையில் ஆரம்பமாகும் தாய் மாமா அமர்க்களம் பொண்ணு மாப்பிள்ளை முதல் இரவுக்கு போகும் வரை தொடரும்.
காசியாத்திரியில் எப்போதும் பெண்பக்கம் மட்டுமே நிற்பார் . பெண்ணும்,பிள்ளையும் மாலை மாற்றும் போது “ இத பாருடி அம்மா இப்ப தலையை கொடுத்தியின்னா விடமாட்டான் மாப்பிள்ளை .கழுத்தை நிமிர்த்திக்கோ “ ஓமன் பாலைவன ஒட்டகம் போல போஸ் கொடுப்பார் . “பார் இப்படித்தான்” என்பார்.
பெண்ணும், மாப்பிள்ளையும் முகூர்த்தம் முடித்த கையோடு ஜோடியாய் சாப்பிட உடகாரும் இடத்தில கண்டிப்பாக ஆஜராகி “இப்ப இந்த லட்டை எடுத்து ஆத்துகாரருக்கு ஊட்டிவிடு “ என்பார். “இதைத்தானே இப்ப நாங்க பார்க்கமுடியும் “ என்று கமெண்ட் வேற!.
தாய் மாமாவின் தொல்லை தாளாமல் அவர் பக்கம் போகவே பயப்படுவோர் பலர். விடுவாரோ?
“ஏன்டா , உன்னோட பெண் நிம்மு மைசூர் இன்போஸிஸ்ல இருந்து மெட்ராஸுக்கு டிரான்ஸபர் கேட்டியே வந்துடுத்தா ?“ என்பார். “அங்க நிக்கறார் பார் ஈஸ்வர் அவரேதான் அங்க எச்.ஆர். வி.பி. “ அதோடு விட மாட்டார் . ‘ஈஸ்வர் இங்க வா ‘ என்று சத்தமாக கூப்பிடுவார். கல்யாண மண்டப கெட்டிமேளத்தையும் மீறின குரல். அடுத்த வாரம் ட்ரான்ஸ்பர் ஆகிவிடும். அடுத்து வரும் அவர் வீட்டு எந்த பங்க்ஷன் ஆனாலும் ‘பெஸ்ட் காம்ளிமெண்ட்ஸ் ‘ தாய் மாமா என்றிருக்கும்.
தாய் மாமா பிரபலம் ஆனதற்கு இன்னொரு காரணம் இருக்கு. அவர்தான் அந்த சுற்றத்தார் வாதூல கோத்ர வாட்சப் குரூப் அட்மின். இன்னும் இரண்டு அட்மின்கள் அவரின் பெண் ரசிகைகள்தான் .
வாதூள முனிவர் படம் எங்கோயோ தேடி டி.பி. யாக போட்டுள்ளார் . டி.பி படத்தில் பாவம் முனிவர் முகூர்த்தம் இல்லாத நாட்களில்தான் வாசம். மீதி நாட்களில் எந்த பங்க்ஷன் போகிறாரோ அந்த வீட்டு பெண்ணோ,பிள்ளையோ,பேரனோ,தாத்தாவோ டி .பியாக இருப்பார்கள். இன்னிக்கு என்ன பங்ஷன் என்று குரூப் டி.பி பார்த்தாலே புரிந்துவிடும். என்ன பங்ஷன் என்று பலர் மறக்காமல் இருக்க வீட்டை விட்டு கிளம்புமுன் ஒரு ரிமைண்டர் தட்டி விடுவதில் கில்லாடி தாய் மாமா.
தாய் மாமா ,தனது வயதுக்கு ஏற்ற ஆன்மீக விஷயமெல்லாம் வாட்சப்பில் அனுப்பமாட்டார். சூரியன் உதிக்கும்முன்னே ,’உதய ராகம் ‘ என ஒரு காதல் பாட்டு காலையில் ,இரவின் மடியில் என்று ஒரு ஜாலியான பாட்டும் இரவில் நிச்சயம் அனுப்பிவிடுவார். ‘நான் தானே அந்த சொப்பன சுந்தரி ‘ பாட்டும் ,சிவாஜி, ஏ சகுந்தலா குத்தாட்ட பாடல் அவ்வப்போது ரீபிட் ஆகும் .
வாட்ஸாப்பில் வாதூல குரூப் பங்க்ஷனில் இன்னிக்கு ‘பட்டாபி சமையல் ‘ என்று சிறு குறிப்பு வேறு சில சமயம் . இதை பார்த்தே வருவோரும் உண்டு. ட்விட்டர் பாஷையில் சுருங்க சொன்னால் “ரியல் வாட்சப் மேன்” !
தாய் மாமாவிற்கு அந்த குரூப்பில் உள்ளவர்கள் பற்றி தெரியாத விஷயம் இல்லை. எல்லோரின் பிறந்தநாள் உட்பட. பல சமயம் இது சிக்கலடிவிடும். “ஏண்டி பங்கஜம் வயசு நாற்பத்தி ஆறு ஆறதே இந்த தையோட ‘“ என்பார் . சில மாமிகள் முறைக்க ,சிலர் ஜாலியாக சிரித்தபடி ‘“இன்னும் நாய் குணம் வரலை ” என்பார்கள். “சரி ,போ “ என்று சொல்லி பங்க்ஷன் கும்பலில் வந்திருக்கும் ஒரு கைனகாலஜிஸ்ட்டை கூப்பிட்டு “இவளுக்கு கொஞ்சம் செத்த சப்போர்ட் பண்ணுங்க ,ஒரு கம்ப்ளீட் செக் பண்ணிடுங்கோ ” என சிபாரிசு செய்வார் ஏதோ அண்ணா யூனிவர்சிட்டி வி சி க்கு சிபாரிசு செய்ததுபோல ஒரு பார்வை வேறு.
மூக்கு நீளம் என்றாலும், எல்லா விஷயத்திலும் தாய் மாமா மூக்கை நுழைப்பதை விரும்பாத எதிர் கோஷ்டி ஒன்று உருவானது அந்த குரூப்பில் . குரூப் என்றால் எதிர் கோஷ்டி இல்லாவிடில் என்ன குரூப் அது? தாய் மாமாவிற்கு நோஸ்கட் கொடுக்க -நீள மூக்கை கொஞ்சமாவது வெட்டிவிடவேண்டும் என்பதே அந்த குரூப்பின் அஜெண்டா . அஜெண்டா இல்லாமல் குரூப் இருக்க அது என்ன கட்சியா என்ன?
ஒரு மைக்ரோ ஹாலில் கூடி ஒரு சதி ஆலோசனை கூட்டம் நடத்துவது ,குறைந்த பட்சம் மூன்று திட்டங்கள் தீட்டுவது என்று தீர்மானித்தது எதிர் கோஷ்டி. நீண்ட நெடு டீ.வி .தொடர்களின் சமீபத்திய சதி திட்டங்கள் எல்லாம் நோட் செய்துவர உத்தரவு. இந்த மீட்டிங் விஷயம் எந்த காரணம் முன்னிட்டும் வீட்டு பெண்களுக்கு தெரியக்கூடாது என்று கொக்கோகோலா கலவை ரகசியம் போல பரம ரகசியமாய் வைக்கவேண்டும் என்பது வைத்தி மாமாவின் உத்தரவு. தெரிந்தால் தாய் மாமாவின் பெண் விசிறிகள் திட்டத்தை தவிடு பொடி ஆக்கிவிடுவார்கள் என்பது வைத்தி மாமாவின் எண்ணம்.
வைத்தி , தாய்மாமாவிற்கு ஈடான வயசு. மாமி வீட்டில் டை அடிக்க கூடாது என்று சொன்னதால் பார்க்க ,தாய் மாமாவை விட இருப்பது வயது கூடினால் போல தெரியும் . ஒருமுறை வைத்தி மாமா தெரியாமல் பல் செட்டை கழுட்டுவதை பார்த்த தாய் மாமா ,அவருடைய பொக்கை வாய் சிரிப்பை குரூப் டி.பி யாக போட்டுவிட, வைத்திக்கு கோபம் தீரவேயில்லை . அதைவிட அவர் வீட்டு மாமி
"ஆஹா
,”கிழம் என்னமா சிரிக்கிறது ‘“ என்று குரூப்பில் அந்த படத்திற்கு கமெண்ட் செய்ய அப்போது எப்படி என் வயசை ஒத்த இந்த கிழத்தை தண்டிப்பது என்று நொந்து வந்ததே இந்த
திட்டம். வாரத்தின் நடு நாளாய் புதன் கிழமை பத்து மணிக்கு எதிர் கோஷ்டி கூடுவதாக திட்டம்.
எல்லாரும் வந்தாயிற்று குறிப்பிட்ட அந்த மைக்ரோ ஹாலுக்கு . எல்லோரும் ஏதோ ஒரு பொய் சொல்லி ஆபீசில் பெர்மிசன் . வைத்தி மாமா மட்டும் மாமியிடம் கறி காய் வாங்கி வருவதாக சொல்லி ஒரு மஞ்சள் பையுடன் கிளம்பிவிட்டார் . அந்த மைக்ரோ ஹால் வாசலில் செருப்பு கூட்டம். கூடவே டூ வீலர்கள் கூட்டம் வேற.
“எல்லாரும் வந்தாச்சா ?” வைத்தியின் குரலுக்கு “ஹோ வந்தாச்சே .. இன்னும் யார் வரணும்? தோ ,நானே வந்துட்டனே ‘“ தாய் மாமாவின் குரல் மைக்ரோஹாலின் எட்டு தூண்களில் எதிரொலித்தது.
எல்லோரும் பேந்த பேந்த முழிக்க . “ யார்ரா எண்னை விட்டிட்டு பார்ட்டி ஏற்பாடு பண்ணது ?
ஆமா என்ன விஷேஷம் ? யார் பார்ட்டி இது? வாசல்ல எல்லாம் தெரிஞ்ச வண்டியா இருக்கேன்னு பார்த்தேன். யார் பேச்சலர் பார்ட்டி இன்னிக்கு ,அதுவும் காலங்காத்தாலே ? ,சொல்லியிருந்தா குரூப்ல போட்டிருப்பேனே “ என்ற தாய் மாமாவை பார்த்து அனைவருக்கும் வியர்க்க, பேச்சு இலர் ஆகினர் “பார்ட்டின்னா ஒரு ஏ சி ஹால் ஏற்பாடு பண்ணியிருக்கலாமே?” என்ற கேள்விக்கு அந்த குரூப்பில் பதில் சொல்ல ஆளில்லை. ஆளாளுக்கு நழுவ ,தாய் மாமா பேஸ்த்து அடித்த அனைத்து முகங்களையும் போட்டோவும்,வீடியோவும் எடுக்க ,இலஞ்சம் வாங்கி ,போலீஸிடம் மாட்டும் அதிகாரிகள் போல பலர் முகத்தை மறைக்க ,பாவம் வைத்தி மாமாதான் மஞ்சள் பையில் முகம் மறைக்க ரொம்ப சிரமப்பட்டார்.
வீடியோவும்,போட்டோக்களும் சூட்டோடு சூடாக வாதூல வாட்ஸாப் குரூப்பில் தாய் மாமா போட்டு , “பார்ட்டி பிரமாதம் ஏ .சி தான் சரியில்லை “ என குறிப்போடு தாய் மாமா குரூப்பில் வெளியிட ஏற்பட்ட விழுப்புண்களை சொல்லியும் எண்ணியும் மாளாது. எல்லோரின் கைப்புண்ணிற்கு கண்ணாடி வேறயா ? வைத்தி மாமாவின் பல் செட் உடைந்து விட்டதாக கேள்வி. பின்னே காய் கறி வாங்க வேண்டிய பையால் முகத்தை ஏன் மூடனும் என்ற வைத்தி மாமாவின் மாமி ‘அப்படி என்ன கருமாந்திரம் பண்ணி தொலைச்சேள் சொல்லுங்க ‘ என்று கேட்ட கேள்விக்கு மிஸ்டர் பீன்ஸ் கணக்காய் பாடி லாங்வேஜில் பதிலளித்தாள் என்ன ஆகும்? அவர் பாடி ஆகாமல் இருந்ததே பெரிய விஷயம்.
மேற்கண்ட சதி ஆலோசனையில் ,ஆழ்வார்க்கடியான் போல எப்படி தாய் மாமா வந்தார் என தெரியாமல் ,தாய் மாமாவிற்கு எதிரான ஆலோசனை அன்றே கை விடப்பட்டதன் காரணம், அன்று ,நிறைய பேருக்கு வீட்டில் கால்,கை,கூடவே சப்பாத்தி கட்டைகளும் ,கரண்டிகளும் இன்னபிற முறிந்ததுதான் காரணம்.
அப்புறம் என்ன , தாய் மாமாவை ‘வாட் எ வாட்ஸாப் மேன் ?’ என ரஜினியை மேகி பார்ப்பது போலவே பார்க்கத்தொடங்கியது அந்த குரூப்.
அந்த சதி ஆலோசனைக்கு பின் தாய் மாமாவின் டை பளபளப்பு கூட கூடி விட்டது போல் இருந்தது. கூடவே அவரது நக்கல்களும்.
சமீபத்தில் நடந்த கல்யாணத்தில் ‘முதல் இரவு ஓட்டல்லதான் மாமா ‘ என் சொல்ல,பொண்ணு மாப்பிள்ளயோடு முன் சீட்டில் காரில் உட்கார்ந்து “சுஜாதா இருந்தாரில்லை என்கிட்டே ஒரு இலக்கிய கூட்டத்தில மெக்ஸிகோ நகர சலவை காரி ஜோக் சொன்னார் தெரியுமோ ? “ என்று ஜோக்கடிக்கும் அளவுக்கு தாய் மாமா அமர்க்களம் கூடி விட்டது.
இன்று வைத்தி மாமாவின் பேத்திக்கு கல்யாணம். மாப்பிள்ளை மலேசியவாம். தாய் மாமா ஆஜர். ‘பிரிக்பீல்ட்ஸ் சரவணபவன் போயிருக்கியோ ?’ என்று மாப்பிளையிடம் விசாரிக்க தொடங்விட்டார் தாய் மாமா.
தாய் மாமாவிடம் நெருங்கி வந்த வைத்தி “இவருதான் மாப்பிளையோட தாத்தா ராமமூர்த்தி . நம்ம மேலத்தூர் அஹ்ரகாரத்திலேதான் இருந்தவர் . உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம் என்றார்.இது அவரோடு சம்சாரம் ,பங்கஜம்.” பங்கஜம் பேரை கேட்டவுடன் சற்றே நடுங்கினார் தாய் மாமா.
ராமமூர்த்தி ,டை அடித்து இந்திரா காந்தி போல நடுவில் ஒரு கொத்து முடி மட்டும் வெள்ளையாய் விட்டு இருந்தார் . வைத்த கண் வாங்காமலே தாய் மாமாவை பார்த்தார் ராம மூர்த்தி, பங்கஜமும்தான்.
சற்றே ராக் மியூசிக்கிற்கு ,ரசிகர்கள் தலை அசைப்பது போல தலையை அசைத்த ராமமூர்த்தி , தாய் மாமாவின் நீள மூக்கை உற்று பார்த்தார் . “ஹே கண்டு பிடிச்சிட்டேன். நீ சுப்பிணி தானே. இவதாண்டா பங்கஜம் நீ லவ் லெட்டர் கொடுத்திட்டு ஊரை விட்டு ஓடிட்டிடேயே அவளேதான்”.
தாய் மாமா முதல் முறையாக ஒரு பங்கஷனில் நடுங்கிய சமயம் அதுவே. விடவில்லை ராமமூர்த்தி.
“ஏன்டா நீ வீட்டு பாட புத்தகத்தில் லவ் லெட்டர் வெச்சே சரி,அதை பங்கஜத்து கிட்டே கொடுக்காமே, மறந்து ஹெட் மாஸ்டர் கிட்ட சப்மிட் பண்ணிட்டே. ஹெஅட்மஸ்ட்டர் பொண்டாட்டி பேரும் பங்கஜம்தான் . ஹெஅட்மாஸ்டர் நீ அவர் பொண்டாட்டி பங்கஜத்திற்குத்தான் லவ் லெட்டர் கொடுத்தேன்னு உன்னை ஸ்கூலை விட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டார். அப்ப ,சொல்லியிருக்கலாமேடா , லவ் லெட்டர் உன் பக்கத்துக்கு வீட்டு பங்கஜத்திற்குன்னு”
ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தார் ராமமூர்த்தி..
“ லவ் லெட்டர் எழுதற தைரியம் இருந்த உனக்கு சரியான ஆள்கிட்ட கொடுக்க தெரியலயே .
நீ ஊரை விட்டு ஓடனதும் பங்கஜம் தான் என்கிட்டே சொன்னா. நான் உன்னைவிட மூணு வயசு மூத்தவன். நானும் பங்கஜத்தை லவ் பண்ணினேன். கல்யாணம் முடிஞ்சி மலேசியா பினாங்கில் செட்டில் ஆயிட்டேன்,எனக்கு இன்னோர் பேர் தெரியுமோ ‘பினாங்கு தாத்தா ‘ “ சொல்லிவிட்டு சிரிப்பு யோகா காரர்கள் கையை மேலே தூக்கி சிரிப்பது போல் ஹோவென்று சிரித்தார்.
பங்கஜ மாமி , தாய் மாமாவை பாவமாய் பார்த்தாள். இப்படி ஒரு பாவ பார்வையை தாய் மாமாவிடம் யாரும் வீசியதில்லை. முதன் முறையாக துண்டை முகத்தால் மூடிக்கொண்டார் தாய் மாமா. வெட்கமா,இல்லை கண்ணீரை மறைக்கிறாரா தெரியவவில்லை.எல்லோரும் ஹோ வென்று சிரிக்க விடுவிடுவென மண்டபத்தை விட்டு விடுவிடுவென வெளியேறினார் தாய் மாமா.
யாரோ குசும்பு வான் தாய் மாமாவின் கதையை ‘தாய் தா(த்)தா ‘ என்று ஒரு சிறுகதையாய் வாதூல வாட்ஸாப்ப் குரூப்பில் அன்றே எழுதிவிட்டான். கதை வந்த சில நிமிடத்தில் ,வாதூல குரூப்பில் ஒரு வாட்சப் மெசேஜ் “‘தாய் மாமா லெஃப்ட் தி குரூப் “ என்று! . அது என்ன கதையா ?.மீண்டும் கதையின் முதல் வரிக்கு போங்கள் !
அருமை
பதிலளிநீக்குthank you -Nanri !
பதிலளிநீக்கு